Wednesday, 22 February 2017

மிருதனின் குற்றம்!

மிருக மனமொன்றுடன் வந்தாய்
மிருகத்தனம் அதன் இயல்பு என்றாய்

பார்வையின் பிழைகளை, பருவத்தின் சிக்கல்கள் என்றாய்
போர்த்தி வைத்த பதுமையை, உடைத்து எரிந்து
மூடி வைத்ததன் விளைவு என்று விவாதமும் செய்தாய்

புதுமை பெண்கள் பலர் பிறந்ததை கண்டு
சினம் கொண்ட நீயோ அதை சிதைக்கவும் செய்தாய்
வேட்டையாட பிறந்த உயிரினை சீண்டும் வகையில்
திறந்து வைத்ததும் உன் தவறே என்று கூறி
சிதைத்ததன் காரணம் சரியென வாதிட்டாய்

பழமையும் கைவிட, புதுமையும் தோற்று விட,
எதை தொடர என்று குழம்பி தவிக்கும் பெண்டீர் மனதினை
புரியா புதிர் என்று ஒதுக்கி தள்ளி விட்டாய்

சமுதாய கட்டமைப்பை, சமாதான கட்டமைப்பாக மாற்றியதும் நீயே!
எல்லாமும் உன் பிழையாய் இருக்க,
பேதை பெண்டிர்க்கு சுதந்திரம் தர, அவள் உன் குடும்பத்தில் ஒருத்தியாக இருக்க வேண்டும் என்று நினைப்பது மட்டும் எவ்விதத்தில் நியாயம்?

Monday, 6 February 2017

ஒரு மணி துளி கவிதை


ஒரு மணி துளி போதும்,
அவள் உன் மேல் காதல் கொள்ள
ஒரு மணி துளி போதும்,
அவளுக்கு உன் மேல் கோபம் எழ
ஒரு மணி துளி போதும்,
அவள் உன்னை புரிந்து கொள்ள
ஒரு மணி துளி போதும்,
அவள் உன்னை பிரிந்து செல்ல
ஒரு மணி துளி போதும்,
அவளை நீ கவர்ந்து அள்ள,
ஒரு மணி துளி போதும்,
அவள் உன்னை உதறி தள்ள
ஒரு மணி துளி போதும்,
உன் மடியில் அவள் விழ
ஒரு மணி துளி போதும்,
உன்னாலே அவள் அழ

இவை அனைத்தும் ஒரு மணி துளியில் சாத்தியம் என்னினும்,
அதனை முடிவு செய்வது மட்டும் அவள் என்பதே சத்தியம்!

Friday, 20 January 2017

இளங்காளைகளின் சீற்றம்!

ஓ கடலே !

எங்கள் சீற்றத்தை கண்டு அஞ்சாதே
இது உயிர் பலி வாங்கிடாத சுனாமி !!!

சாது மிரண்டால் காடு கொள்ளாது - இது பழமொழி!!!
சாது மிரண்டால் கடலும் கொள்ளாது - இது புதுமொழி!!!

சீறி பாயும் காளைகள் கண்டு,
சினம் கொண்ட சிங்கங்கள் ஓடுவது உண்டு !!!

இளங்காளைகள் நாங்கள் சீறிட,
எமனும் வந்து நிற்பான் தோற்றிட !!!




Saturday, 3 December 2016

தந்தையின் தவிப்பு!

தந்தையெனும்  தரத்திலிருந்து  தவறினேன் !!!
தோளில் சுமந்த என் கண்ணை
கீழிறக்க துணிந்து, தவறொன்று செய்தேனே !!!
மற்றொரு குழந்தையினை ரசித்து நான் கொஞ்ச
நின்னை மறந்ததும் என் தவறே!!!
உன் முகத்தில் இழந்த ஒளியை கண்டு இருண்டது என் உலகம்
ஒளியற்று தவிக்கிறேன்!!!
ஒளியேற்ற வருவாயோ!!!

கல்வியின் பரிமாணம்

இருண்ட உலகெனும் கரும்பலகையில் வெளிச்சம் வீசிய சாக் பீஸ், 
அது அக்கால கல்வி!
வெளுத்த பாலாடை பலகையில் கறுப்பு கோடிட்ட மார்க்கர், 
அது இக்கால கல்வி!
கல்வியே சிறந்த செல்வமென்று, கலைகள் பல கற்று தந்தது, 
அக்கால கல்வி!
கல்வி கற்பதே செல்வம் சேர்க்கத்தான், என்று சொல்லாமல் சொல்லி தந்தது, 
இக்கால கல்வி!
கற்றவர்க்கு செல்லும் இடமெல்லாம் சிறப்பு, என்று வாழ்த்தி பாடியது, 
அக்கால கல்வி!
செல்லாத இடமில்லை, சென்றும் பயனிலை என வேளைக்கு திண்டாடுவது, 
இக்கால கல்வி!